கருணாநிதியின் மகள் செல்வி மோசடி வழக்கிலிருந்து விடுவிப்பு

புதன், 13 ஜனவரி 2016 (10:21 IST)
சென்னையை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கிலிருந்து கருணாநிதியின் மகள் செல்வியை சென்னை உயர்நீதிமன்றம்  விடுவித்து உத்தரவிட்டுள்ளது.


 

 
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர், கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் டாக்டர் வி.எம்.ஜோதிமனி என்பவர் மீதி 2012 ஆம் ஆண்டு கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
 
அதில், ஜோதிமணியிடம் இருந்த 2.94 ஏக்கர் நிலத்தை தான் விலைக்கு வாங்குவதற்காக , மொத்தம் ரூ.5.14 கோடிக்கு விலை பேசி ரூ. 3.50 கோடி அவரிடம் கொடுத்ததாகவும், ஆனால் ஜோதிமணி கூறியபடி அந்த நிலைத்தை தனக்கு பத்திரப்பதிவு செய்து தரவில்லை என்றும் கூறியிருந்தார்.
 
மேலும், பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஜோதிமணி ஒரு காசோலை கொடுத்ததாகவும், ஆனால், அந்த காசோலை அவரது கணக்கில் பணம் இல்லை என்று திரும்பிவந்து விட்டதாகவும், இதுபற்றி அவரிடம் விசாரித்த போது அவரின் மாமியாரும், கலைஞரின் மகளுமான செல்வி தன்னை மிரட்டியதாகவும், எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
அந்த புகாரின் அடிப்படையில், ஜோதிமணி மற்றும் செல்வி ஆகியோரின் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டும் போலிசார் தாக்கல் செய்தனர்.
 
இந்நிலையில், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதால், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், அந்த வழக்கிலிருந்து செல்வியை விடுவித்து உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்