கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது: கவிஞர் வைரமுத்து கோரிக்கை

வெள்ளி, 3 ஜூன் 2022 (14:44 IST)
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதிய கவிதையில் கூறியிருப்பதாவது:
 
'அஞ்சுகத்தாயின் ஓரே மகன் ஆகையால்
 
நீ ஒன்றானவன்
 
கருப்பென்றும், சிவப்பென்றும்
 
இரண்டானவன்
 
பிறந்தநாளால் மூன்றானவர்...
 
தியாகராயர்- பெரியார்- அண்ணா- கலைஞர்
 
என்ற வரலாற்று வரிசையால் நான்கானவன்
 
தமிழ்நாட்டு முதலமைச்சராய்
 
ஐம்முறை ஆண்டதால் ஐந்தானவன்
 
எமக்கு இனிப்பு
 
இந்திக்கு கசப்பு
 
ஏழைக்கு உப்பு
 
வயிற்றில் கரைத்ததால் எதிரிக்கு புளிப்பு
 
வாதத்தில் உறைப்பு
 
பித்தம் நீக்கும் துவர்ப்பு
 
அறுவகைச் சுவைகளால் ஆறானவன்
 
வாரமெல்லாம் செய்தியானதால்
 
ஏழானவன்
 
திசையெல்லாம் இசைபட வாழ்ந்ததால்
 
எட்டானவன்
 
கிரகங்களெல்லாம் சுற்றி வந்த சூரியன் என்பதால்
 
நீ நவமானவன்
 
அள்ளிக் கொடுத்த முரசொலி விருதால்
 
லட்சமானவன்
 
எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கொடுத்ததால்
 
கோடியானவன்
 
உன்னை
 
எண்ணங்களாலும் சிந்திக்கலாம்;
 
எண்களாலும் சிந்திக்கலாம்..' 
 
மேலும், கருணாநிதிக்கு உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் எனவும் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்