ஹெல்மெட் தலைக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா? நீதிமன்றம் கண்டனம்

வியாழன், 3 அக்டோபர் 2019 (20:28 IST)
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் பலர் அந்த உத்தரவை மதிக்காமல் ஹெல்மெட் இன்றி பயணம் செய்து வந்தனர். ஆனால் புதிய மோட்டார் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் ஓரளவு வாகன ஓட்டிகள் விதிகளை மதித்தாலும், இந்த சட்டம் இன்னும் தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை என்பதால் வாகன ஓட்டிகளுக்கு குளிர்விட்டு போனதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் பலர் ஹெல்மெட் வைத்திருந்தாலும் அதை தலையில் அணியாமல் பெட்ரோல் டேங்க் மேல் வைத்துவிட்டு போக்குவரத்து காவலர்களை பார்த்தால் மட்டும் உடனே தலையில் மாட்டிக்கொள்கின்றனர். மேலும் ஊருக்கு வெளியே வந்துவிட்டால், போலீஸ் தொந்தரவு இருக்காது என்பதால் மீண்டும் ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டேங்குகள் மீது வைத்துவிடுகின்றனர்.

இந்த நிலையில் ஹெல்மெட் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘இருசக்கர வாகன ஓட்டிகளை விட பெட்ரோல் டேங்குகள் தான் அதிகமாக ஹெல்மெட் அணிகின்றன என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஹெல்மெட் சோதனையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்