கொங்குமண்டல தொழிலதிபரை அவமதிப்பதா? ஜோதிமணி எம்பி கண்டனம்..!

Siva

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (11:38 IST)
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த தொழிலதிபர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சரிடம் ஜிஎஸ்டி வரி குறித்து நகைச்சுவையாக பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன் அவர்கள் நேற்று நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறி இருப்பதாவது:
 
கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் திரு.சீனிவாசன் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும்  தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.  
 
வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை.  
 
ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட. 
 
அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா?  
 
தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.
 
 நீங்கள் பாஜகவிற்கு  அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. 
 
அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும். 
 
திரு. சீனிவாசன் அவர்களுக்கு எனது அன்பும்,ஆதரவும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்