ஜெயக்குமார் வழக்கு.! மனித உரிமை ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

Senthil Velan

திங்கள், 1 ஏப்ரல் 2024 (17:06 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கை அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன் என மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
கடந்த 2022-ல் உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். 
 
கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மற்றும் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு ஜெயக்குமாரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
 
இருவரும் அளித்த புகாரை கடந்த ஆண்டு ஜூலை மாதம், மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. ஆனால், தான் அளித்த புகாரில் தனது விளக்கத்தைக் கேட்காமல் வழக்கை முடித்து வைத்ததாக கூறி, ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 
 
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் புகாரை காவல்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் முடித்து வைக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ALSO READ: திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்..! 2 ஆம் எண் அறையில் அடைப்பு..!!

மேலும் காவல்துறை அறிக்கை மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும் புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், உரிய காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை  நாளைக்கு ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்