மூடிய டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது - தமிழக அரசிற்கு செக் வைத்த நீதிமன்றம்

செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (16:06 IST)
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவே, 3 ஆயிரத்து 300 கடைகளை சமீபத்தில் தமிழக அரசு மூடிவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 


 

 
எனவே, மீதமிருக்கும் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. மேலும், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் தமிழக அரசிற்கு கிடைக்கும் வருமானம் பெருமளவு குறைந்தது.  
 
எனவே, வருமானத்தை அதிகரிக்க ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மூடிய 1000 கடைகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு தொலைவில் அமைந்துள்ள கடைகளை கணக்கெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் அப்போதே வெளியானது. 
 
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், தேசிய நெடுஞ்சாலைகளை மாற்ற இருப்பதாக கூறப்பட்டிருந்தது. எனவே, இதன் மூலம் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு திட்டமிட்டது தெரியவந்தது. எனவே, மூடிய கடைகளை திறப்பதற்கு வசதியாக, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றம் செய்வதை அனுமதிக்கக்கூடாது என பாமக, திமுக கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
எனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தடையில்லை. ஆனால், அங்கு மூடப்பட்ட டாஸ்மாக்கை மீண்டும் திறக்கமாட்டோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு வழக்கறிஞர் பதில் கூறவில்லை.
 
எனவே, மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என தீர்ப்பளித்தனர். இந்த வழக்கு மீண்டும் ஜூலை முதல் வாரத்திற்கு விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்