போலீஸாருக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம் - இல்லையெனில் கடும் நடவடிக்கை

திங்கள், 30 ஜூலை 2018 (12:15 IST)
ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் விபத்துக்களால் நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க, தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியது. அதேபோல், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.
 
இந்த விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தும், லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
 
ஆனால் ஹெல்மெட் அணியவில்லை என பொதுமக்களை மிரட்டும் போலீஸ்காரர்கள் பலர், ஹெல்மெட் அணியாமலும், சீட்பெல்ட் போடாமலுமே வாகனத்தை இயக்குகின்றனர் என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
 
இந்நிலையில் வாகனம் ஓட்டும் போலீஸார் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்டை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அதனை மீறும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்