மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

Senthil Velan

திங்கள், 20 மே 2024 (12:30 IST)
தூத்துக்குடி அருகே குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவர், வீட்டில் இருந்த சேலையால் அவரது கழுத்தை இறுக்கி மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அழகு பாண்டி (வயது 51). இவருடைய மனைவி கூரியம்மாள் (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
 
இதனால் கணவன்- மனைவி மட்டும் ராமச்சந்திரபுரத்தில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது.
 
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அழகு பாண்டி,  கூரியம்மாளை வீட்டில் கிடந்த கம்பால் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் வீட்டில் இருந்த சேலையால் அவரது கழுத்தை இறுக்கி மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். இதை அடுத்து அழகுபாண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
 
இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கூரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!


மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அழகுபாண்டியை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்