அப்துல் கலாம் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை - உயர்நீதிமன்றம்

வெள்ளி, 6 மே 2016 (17:08 IST)
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், அப்துல் கலாம் லட்சிய இந்தியா என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கியுள்ளார். தமிழருமணியனின் காந்திய மக்கள் இயக்கமும் பொன்ராஜின் கட்சியும் கூட்டணி அமைத்து நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
 
அப்துல் கலாமின் பெயரை பொன்ராஜ் கட்சியில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான மரைக்காயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக அப்துல் கலாம் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.
 
மேலும், முத்துமீரான மரைக்காயரின் மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்