மருத்துவமனையில் பாலியல் தொந்தரவு - மருத்துவ அலுவலருக்கு குட்டு!

சனி, 12 ஜூன் 2021 (13:32 IST)
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஸ்டெனோகிராப்பருக்கு பாலியல் தொந்தரவு அளித்த உதவி மருத்துவ அலுவலர் மதுரைக்குப் தூக்கி அடிக்கப்பட்டார்.

 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுசாமி , மனைவி ரஞ்சிதா,  வயது 25. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், சித்தா மருத்துவ பிரிவில், ஸ்டேனோவாக பணிபுரிகிறார்.  இங்கு பணிபுரியும் ஓமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன், வயது  40, பெண் பணியாளர் ரஞ்சிதாவுக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, மாவட்ட சித்த மருத்துவ அலுவலரான அய்யாசாமியிடம், அப்பெண் புகார் அளித்துள்ளார். 
 
அதைப்பற்றி ரஞ்சிதா கூறும்போது, சிறுவயதில் தாயை இழந்து, ஆதர வற்றோர் விடுதியில் தங்கி படித்து, கஷ்டப்பட்டு, 2017ல் ஸ்டேனோவாக பணியில் சேர்ந்தேன்.ஆறு மாதங்களுக்கு  முன், செவிலியர் அறையில் இருந்த என்னிடம், ஓமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன், தகாத முறையில் நடக்க முயன்றார்.'உயர் பதவியில் இருக்கும் நீங்களே இப்படி தவறு  செய்யலாமா. இனிமேல் இது போன்ற தவறு செய்தால், மேல் அதிகாரியிடம் புகார் தெரிவிப்பேன்' என, எச்சரித்தேன். 
 
இந்நிலையில், மே மாதம் 18ம் தேதி, அலுவலகத்தில் தனி ஆளாக  பணியில் இருந்தபோது, அங்கு வந்த முத்துகிருஷ்ணன், தகாத வார்த்தைகளை பேசி, தகாத முறையில் நடந்து கொண்டார். அவரை தள்ளிவிட்டு எச்சரித்தபோது, 'நீ யாரிடமும் போய் சொல்.  என்னை ஒன்றும் செய்ய முடியாது' என, அவர் தெனாவட்டாக கூறினார். அவரிடம் இருந்து தப்பித்து ஓடி.  என் கணவரிடம் நடந்ததை கூறினேன்.அவரது உதவியுடன், மாவட்ட சித்த  மருத்துவ அலுவலர் அய்யாசாமியிடம் புகார் அளித்தேன். 10 நாட்களுக்கு மேலாகியும், நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்தவர்கள் , தொலைக்காட்சியில் செய்தி வந்தவுடன் உதவி  மருத்துவ அலுவலர் முத்துகிருஷ்ணனை மதுரை மாவட்டத்திற்க்கு  பணியிட மாற்றம் செய்துள்ளனர். 
 
உயர் ஜாதிக்காரர்கள் இங்கு அதிகம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களை மீறி, நீ ஒன்றும்  செய்ய முடியாது' என, மாவட்ட சித்த  மருத்துவ அலுவலர் அய்யாசாமி உள்ளிட்ட சிலர் என்னை பயமுறுத்துகின்றனர். மன ரீதியாக, பாலியல் தொந்தரவு சம்பவம் எனக்கு பாதிப்பை  ஏற்படுத்தியதால், என்னால், நிம்மதி யாக இங்கு வேலை செய்ய முடியாது. குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க  வேண்டும் என ரஞ்சிதா கூறினார்.
 
வேலியே பயிரை மேய்ந்த கதையாக,   2017ல், 'அய்யாசாமி, தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்' என, மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் புகார் தெரிவித்தார். மருத்துவ சங்கத்தின் அறிவுரையை அடுத்து, பெண் மருத்துவரிடம், காஞ்சிபுரம் மாவட்ட சித்த மருத்துவரான அய்யாசாமி மன்னிப்பு கேட்ட பிரச்சனையும் இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது. இதையடுத்து, அப்பிரச்னை முடித்து வைக்கப்பட்டது.
 
வன்கொடுமை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ரஞ்சிதாவை நாளை விசாரணைக்கு  மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்துக்கு வருமாறு நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் அந்த வளாகத்தில் பணிபுரியும் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்