'பொதுத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும் ‘- ராமதாஸ் டுவீட் !!!

திங்கள், 23 மார்ச் 2020 (14:01 IST)
'பொதுத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும் ‘- ராமதாஸ் டுவீட் !!!

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் முடிக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிற அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு வரத்தேவையில்லை என்றும் அறிவிக்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் அச்சம் உச்சத்தை அடைந்த பிறகும் 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் அரசு தேர்வுத்துறை பிடிவாதம் காட்டுவது முறையல்ல. ஓரிரு தேர்வுகள் மட்டுமே மீதம் இருந்தாலும் கூட, அத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும்! #CoronaVirus #LockDownTNnow என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் பாமக கூட்டணியில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்