சென்னையில் அரசுஊழியர்கள் ஆதார்எண் பெற சிறப்பு ஏற்பாடுகள்

வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (03:01 IST)
சென்னையில், அரசுஊழியர்கள் ஆதார்எண் பெற சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கருவூல கணக்குத்துறை அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, கருவூல கணக்குத் துறை இயக்குனர் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பயோ மெட்ரிக் தகவல் சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த மையங்கள் மூலம், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் தகவல் சேகரிக்கப்படும். பின்பு, ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், இதுவரை பதிவு செய்யாத, சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள், அதற்கான படிவங்களை வாங்கிப் பூர்த்திச் செய்து இந்த மையத்தில் அளிக்க வேண்டும்.
 
மேலும், ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
 
ஏற்கனவே, ஆதார் எண்ணுக்காகப் பதிவு செய்தவர்கள், தங்களது அட்டை விவரம் குறித்து அறிய, www.resident.uidai.net.in என்ற வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்