என் மகளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் - காயத்ரி ரகுராமின் தாய் உருக்கம்

வியாழன், 13 ஜூலை 2017 (16:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறாக பேசிய காயத்ரி ரகுராமின் பேச்சிற்கு, அவரின் தாய் கிரிஜா மன்னிப்பு கேட்டுள்ளார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம், நடிகை ஓவியாவை ‘சேரி பிஹேவியர்’ என கமெண்ட் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதன் மூலம் அவரது ஜாதிய வன்மம் வெளிப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் கருத்துக்கள் எழுந்துள்ளது. மேலும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். விடுதலை சிறுத்தை திருமாவளவனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே தடை விதிக்க வேண்டும் என தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் போலீசாரிடம் மனு அளித்துள்ளனர்.
 
இந்நிலையில் இதுபற்றி ஒரு தொலைக்காட்சியில் பேசிய காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா “என் மகள் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெண் என்றும் பாராமல் அவரை இழிவு படுத்துகிறார்கள். அவர் பாஜக-வில் இருப்பதால்தான் இப்படி பேசுகிறார்களா என தெரியவில்லை. இது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. என் மகள் காயத்ரி அப்படி பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்