தீ விபத்தில் எரிந்த பொங்கல் இலவச வேட்டி, சேலைகள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திங்கள், 9 ஜனவரி 2023 (11:22 IST)
தமிழ்நாடு அரசால் பொங்கலுக்கு வழங்க இருந்த இலவச வேட்டி, சேலைகள் தீயில் எரிந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பொங்கலையொட்டி ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, கரும்பு, சர்க்கரையுடன், ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இன்று பொங்கலுக்கான இலவச பொருட்கள் வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. பல பகுதிகளில் மக்களுக்கு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையிலும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்காக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் அரசின் வேட்டி, சேலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த 29 ஆயிரம் சேலைகள், 19 ஆயிரம் வேட்டிகள் தீயில் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலவச வேட்டி, சேலைகள் தீயில் எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்