சென்னை பள்ளிக்கரணையில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்!

வியாழன், 11 நவம்பர் 2021 (10:46 IST)
தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.  சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 430 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 420 கி.மீ மையம் கொண்டுள்ள நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மகாபலிபுரம் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே புயல் நகர்ந்து செல்லும் எனவும் புயல் கடக்கும் நேரத்தில் அதிவேகமாக காற்று வீசக்கூடும் எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்  விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 
 
இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளில் மழைநீர் கடல் போல் தேங்கியுள்ளதால் தாழ்வான இடங்கள், சுரங்கப்பாதை வழியாக பேருந்துகள் இயக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேனாம்பேட்டை,  அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. 

அதே போல் சென்னை சென்னை பள்ளிக்கரணையில் மழை நீர் தேங்கி வெளியே செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகள் தண்ணீரில் மிதப்பதால் மேல் மாடியில் சென்று தஞ்சமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்