குடிபோதையில் எட்டுமாத குழந்தையை கிணற்றில் வீசிக்கொன்ற தந்தை

செவ்வாய், 29 மார்ச் 2016 (15:30 IST)
சிவகாசி அருகே தனது எட்டு மாதக் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (25).இவரது மனைவி சங்கரேஸ்வரி (22). இவர்களுக்கு யோகமுனீஸ்வரன் என்ற எட்டு மாதக் குழந்தை உள்ளது.
 
யோக முனீஸ்வரனுக்கு வலிப்பு நோய் வரும் எனக் கூறப்படுகிறது. மேலும், மாரீஸ்வரன் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். வீட்டுச் செலவுக்கும் குழந்தையின் மருத்துவச் செலவுக்கும் பணம் தர மறுத்துள்ளார்.
 
இந்நிலையில், ஞாயிறன்று குடிபோதையில் இருந்த மாரீஸ்வரன் மனைவியிடம் தகராறு செய்ததோடு, குழந்தை தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் வீசி விட்டுத் தப்பியோடி விட்டார்.
 
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். ஆனால், அதற்குள் குழந்தை இறந்துவிட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர் மாரீஸ்வரனை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்