இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்: டங்க் ஸ்லிப் பட்டியலில் இணைந்த ஈவிகேஎஸ்

வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (08:27 IST)
இந்த தேர்தலில் நடப்பது போன்ற கூத்து இதுவரை எந்த தேர்தலிலும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் சின்னம் மாறி ஓட்டு கேட்பதும், எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு கேட்பதும், இறந்தவரை பிரதமர் ஆக்குவோம் என்று சொல்வதும், சொந்த கட்சி சின்னத்திற்கே ஓட்டு போட வேண்டாம் என்று டங்க் ஸ்லிப் ஆகி சொல்வதுமான கூத்துக்கள் பல நடந்துள்ளது. அந்த வகையில் இந்த டங்க் ஸ்லிப் பட்டியலில் தற்போது காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் இணைந்துள்ளார்.
 
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று  பெரியகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். இந்த கூட்டத்தில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசிய பின்னர் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படியும், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணக்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் பேசினார்.
 
ஈவிகேஎஸ் இளங்கோவன் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசியது கூட்டத்தினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் தவறை சுட்டிக்காட்டியவுடன் சுதாரித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், 'எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரட்டை இலை உதிர்ந்து விட்டதாகவும், எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் கூறி சமாளித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்