சமத்துவத்தை விரும்புபவர்கள் உதயநிதியுடன் நிற்க வேண்டும்! – இயக்குனர் வெற்றிமாறன்!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (10:08 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசிய கருத்துகள் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “சமத்துவம் நமது பிறப்புரிமை. அதில் எந்த கேள்வியும் இல்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டியது அடிப்படை. அதற்கு தடையாக எது வந்தாலும் அது வீழ்த்தப்பட வேண்டும். இந்த உணர்வு உள்ள அனைவரும் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்க வேண்டும். அவர் பேசியதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படாதது குறித்து பேசிய அவர் “விருதுக்கு அனுப்பும்போதே “தேர்வுக்குழுவின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்” என்ற ஒப்புதலை அளிக்கிறோம். அதனால் விருது கிடைப்பதும் கிடைக்காததும் தேர்வுக்குழுவின் முடிவை பொறுத்தது.

ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த படத்திற்கான நோக்கம் அங்கு நிறைவேறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்