எடப்பாடி ஆட்சி இந்த மாதம் இறுதி வரைதான் - விஜயகாந்த் அதிரடி

வியாழன், 28 செப்டம்பர் 2017 (14:35 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி இந்த மாத இறுதி வரைதான் நீடிக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
தற்போது செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியால் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம், தினகரன் எதிர்ப்பு, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு என ஏராளமான பிரச்சனைகளை இந்த அரசு சந்தித்து வருகிறது.
 
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலினுக்கு முன்பே ஓ.பி.எஸ் பிரச்சனை எழுப்பினார். ஆனால், தற்போது அவர் சிவாஜியை விட பெரிய நடிகராக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 
 
கருணாநிதி நன்றாக இருந்திருந்தால் இந்நேரம் இந்த ஆட்சியை கலைத்திருப்பார். அவரின் அரசியல் அறிவும், அனுபவமும் அத்தகையது. ஆனால், அடுத்த முதல்வர் என திமுக கட்சியினரால் அழைக்கப்படும் ஸ்டாலின், எடப்பாடி அரசை கவிழ்ப்பதில் தோல்வி கண்டிருக்கிறார். 
 
எனக்கு கிடைத்துள்ள தகவல் படி, இந்த மாட்த இறுதிக்குள் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்