சென்னையில் ப்ளூ வேல் கேம் விளையாடிய என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை

திங்கள், 23 அக்டோபர் 2017 (12:14 IST)
சென்னையில் நீல திமிங்கலம் விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

 
சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அலமாதி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அப்பகுதியில் டீ கடை நடத்தி வரும் இவருக்கு, தினேஷ் (வயது 26) என்ற மகன் உள்ளார். அவர் என்ஜினீயர் முடித்தவர். மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார். 
 
கடந்த 30ஆம் தேதி தீபாவளிக்காக விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்துள்ளார். தீபாவளி பண்டிகையை பெற்றோருடனும், நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார். ஆனால் மும்பையில் இருந்து வந்ததில் இருந்து அவர், செல்போனில் ஏதோ  விளையாடியதாகவும், பிளேடால் தனது இடது கையை அறுத்துக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது  பெற்றோர், மகனை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த  தினேஷ், திடீரென படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இது குறித்து போலீசார் விசாரணையில் தினேஷின் செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றி ஆராய்ந்தனர். அதில்  தினேஷ், ‘நீல திமிங்கலம்’ விளையாடியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. மேலும் தினேஷ் எழுதி  வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், “எனக்கு தெரியாமல் ஏதோ புதிய உலகம்  தெரிகிறது. நான் மெல்ல மெல்ல எங்கோ எழுந்துகொண்டே போகிறேன்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்