ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

J.Durai

வெள்ளி, 28 ஜூன் 2024 (10:13 IST)
மதுரை மாவட்ட திராவிட கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி என்பவரது 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விறகு வண்டி முதல்... விமானம் வரை... எனும் நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் அமைந்துள்ள தனியார் மஹாலில் தொடங்கி வைத்தார்.
 
இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகக் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்....
 
பாலாற்றில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முடிவு குறித்த கேள்விக்கு.?_
 
பாலாற்றில் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதலின்றி தடுப்பணை கட்ட முடியாது. ஆந்திர அரசு தடுப்பணையை தானாக கட்ட முடியாது., ஆந்திர மக்களிடம் வாக்குகளை பெற்றிருப்பதால் சந்திர பாபு நாயுடு அவ்வாறு பேசியுள்ளார். நமக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா என நீர்பங்கீடு அணை விவகார பிரச்சனை உள்ளது. ஆனால்., உறவு வேறு, உரிமை வேறு.! உறவுகாக உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது.
 
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு அணுகுகிறது. மத்திய அரசும் வித்தைகாட்ட மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஆனால், அவர்களால் சட்டப்படி யாரையும் தண்டிக்க முடியாது., தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஊடக வெளிச்சத்திற்காக நியமனம் செய்கிறார்கள். மனித உரிமை ஆணையத்திற்கு சட்டப்படி எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. அவர்கள் விசாரித்தாலும் ஒரு பயனும் இருக்காது.
 
தற்போது எல்லோரும் சிபிஐ விசாரணை தேவை என கூறுகிறார்கள். ஏதோ சுண்டல் கொடுப்பவன் ஹர ஹர பார்வதே நம என சொல்வது போல சிபிஐ விசாரணை என கூறுகிறார்கள். முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் சிபிஐ என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா என பேசினார்.? இதை எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மறக்கக்கூடாது., தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கோரலாம். 
 
ஆனால், தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எல்லா விசாரணையும் சரியாக சென்று கொண்டுள்ளது. ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது.
 
அவர் நியமித்த ஒரு நபர் கமிஷன் போல இக்கமிஷன் இருக்கும் என நினைத்துக் கொண்டு பழனிச்சாமி பேசுகிறார். உங்களுடைய வசதிக்காக தங்களுடைய தேவைக்காக விசாரணை செய்யும் ஒரு நபராக இல்லாமல் தகுந்த விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கையை எடுப்பதற்கான அறிக்கையை கொடுக்கும் கமிஷனாக கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் கமிஷன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்.
 
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த முடியும் மாநில அரசு நடத்தினாலும் எந்தப் பயனும் இருக்காது, ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த முடியும் என்பதால் தான் தற்போது கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமரை பாஜகவினர்களோடு சென்று சந்தித்து கோரிக்கை விடுத்தார். 
 
தற்போது எந்த மாநிலத்திலும் ஒரு சமூகத்தை அதிகப்படுத்தி இட ஒதுக்கீடு கொடுத்தாலும் நீதிமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. 
 
மாநிலங்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடரும் போது நீதிபதிகள் இந்த தரவுகள் அங்கீகரிக்கப்பட்டவையா என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது இந்த கேள்வியை எழுப்பவில்லை.? எனவே, அது நீதிபதிகளின் பார்வைக்கு விட்டுவிட வேண்டியது. அவர்களுக்கே வெளிச்சம், சமூக நீதியில் முதல்வர் அக்கறை கொண்டிருப்பதால் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக செய்ய வேண்டும் என நினைக்கிறார். பீகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை போல இங்கு நடந்து விடக்கூடாது. 
 
செய்வதை திருந்தச் செய்ய வேண்டும் என்பதற்காக முதல்வர் அனுமதி கேட்டுள்ளார், தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு அஸ்திவாரம் பலமானது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பை சரியாக செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அனைவரிடமும் கலந்து பேசி சமூக நீதிக்கான சரித்திர நாயகராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜாதி வாரி கணக்கெடுப்பை பக்குவத்தோடு நடத்த நினைக்கிறார். 
 
இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசும் பாமக பிரதமர் மோடியோடு நெருங்கி பேசும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக நிற்காமல் பாமக நிற்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். எனவே,கூட்டணியில் தங்கங்களாக அங்கங்களாக இருக்கும் பாமக மத்திய அரசிடம் பேசி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்த வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்