முரசொலி விவகாரம்: உதயநிதியை தொடர்ந்து ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:34 IST)
முரசொலி நில விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து அசுரன் திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். 
 
இதை தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிர் கருத்தாக பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என கூறினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக முக ஸ்டாலின், முரசொலி பத்திரத்தின் பட்டாவை பதிவிட்டு, முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் அல்ல என கூறினார். 
 
இதையடுத்து, ராமதாஸ் முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காட்டுமாறு ஸ்டாலினை குறிப்பிட்டு கூறினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நான் மூலப்பத்திரத்தை காண்பிக்கிறேன், ஒரு வேளை முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகிக்கொள்கிறேன், ஆனால் பஞ்சமி நிலமாக இல்லை என்றால், ராமதாஸும் அவரது மகனும் அரசியலை விட்டு விலகிவிட வேண்டும் என கூறினார். 
 
இதற்கு இடையில் டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் தமிழக பாஜக செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் இது குறித்து புகார் அளித்த்திருந்தார். புகாரின் அடிப்படையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஸ்டாலினுக்கு  நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதோடு ஜனவரி 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அறிவுறித்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்