தேர்தலில் திமுகவுடன் கூட்டணி? செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு

சனி, 9 ஜனவரி 2016 (15:09 IST)
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் காரணம் என்றும் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.


 

 
பெரம்பலூரில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று காலையில் தொடங்கியது. பொதுக்குழுக் கூட்டம் தொடங்கிய உடன் வெள்ளத்தால் உயிரிழந்தோர்க்கும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்டவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. செயற்குழு கூட்டத்தில் முக்கியமாக தேமுதிக நிர்வாகிகளுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. 
 
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் காரணம். அதிமுக ஆட்சியை அகற்ற இப்பொதுக்குழு ஏகமனதாக உறுதி ஏற்கிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் வன்மையாக கண்டிக்கிறது.
 
சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் விஜயகாந்த்துக்கு வழங்கப்படுகிறது. தாது மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை போன்ற விவகாரங்களை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும், மது விலக்கு, லோக்ஆயுக்தா போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


 
 
இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக கட்சியை ஒரு இடத்தில் கூட விமர்சிக்க வில்லை. அதேநேரத்தில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். மேலும், டில்லியில் முதலமைச்சர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனையை ஆதரிக்கும் விதமாகவும் கருத்து தெரிவித்தார். இவருடைய பேச்சு வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்