தொலைபார்வையுடன் மேம்பட்ட உயர்கல்வியை உருவாக்கும் நோக்கத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த சந்திப்பில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான உரையாடல் நடைபெற்றது. மாணவர்களில் பகுத்தறிவு, அறிவுசார் அணுகுமுறையை வளர்த்தெடுக்க வேண்டியதற்குப் பதிலாக, தவறான கருத்துகளை பரப்பக் கூடாது எனவும், அதைப் பாதுகாக்க துணைவேந்தர்களுக்கு முதலமைச்சர் தெளிவாக அறிவுறுத்தினார்.
இந்த சூழலில், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நேற்று துணைவேந்தர்களை கூப்பிட்டு என்ன சொல்லி இருக்கிறீர்களோ அதுதான் புதிய கல்வி கொள்கை.
நீங்கள் ஒருவர் பேசுவதற்காக மட்டும் எழுதி கொடுக்கப்பட்டது அல்ல அது. மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை. அதை அறிமுகப்படுத்தும் போது பாரத பிரதமர் மோடி சொன்னது நம் இந்திய குழந்தைகளை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவது தான் இந்த கல்வி.
ஆக புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக படிக்காமல் மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்பற்றி மாணவ மாணவிகளை உலக அரங்கிற்கு உயர்த்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் மோடி எதிர்ப்பு என்ற கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள்.