எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல்; அடுத்த முதல்வர் தினகரன்: கொளுத்திப் போட்டார் எம்எல்ஏ!

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (09:06 IST)
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது எப்படி சசிகலாதான் அடுத்த முதல்வர் என அதிமுக அமைச்சர்கள் கூறி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்களோ அதேப்போல தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.


 
 
கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பின்னர் சுதந்திரமாக விடுப்பட்டுள்ளனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலக்கோட்டை தொகுதி எம்எல்ஏ தங்கதுரை நேற்று அவரது தொகுதி அலுவலகத்துக்கு வந்தார்.
 
அப்போது கூறிய அவர், மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கருத்தை கேட்டு தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து அவரை முதல்வராக பதவியேற்க வைத்ததாக கூறினார். தொகுதியில் இருக்க வேண்டும் என்பதற்காக அலுவலகத்துக்கு வந்ததாகவும், போலீஸ் பாதுகாப்பு தான் கேட்கவில்லை எனவும் கூறினார்.
 
தொடர்ந்து கூறிய அவர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே தினகரன் கட்சி பணி செய்தார். அவர் கட்சிக்கு நல்லதே செய்வார். மேலும் அவர் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும் என்றார். இதே போல ஆரம்பித்து தான் ஓபிஎஸ்ஸை பதவியில் இருந்து இறக்கி சசிகலாவை கொண்டு வர முயற்சித்தார்கள். தற்போது எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கி தினகரனை கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்