டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: சுப.உதயகுமார் கோரிக்கை

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2015 (00:22 IST)
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து, தஞ்சாவூரில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கூடங்குளம் பிரச்னையில் மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், இந்த போராட்டத்தில், திமுக, அதிமுக கட்சிகள் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மக்கள் போராட்டங்களை வெற்றி பெறச் செய்யக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
 
ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் அந்தந்த பகுதியிலுள்ள பிரச்னைகளுக்காக போராடுகின்றனர். அது போன்று இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகம் முழுக்க அனைத்து பிரச்னைகளுக்கும், மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இதற்கு ஆதரவான இயக்கங்களை சந்திப்பதற்காக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறோம்.
 
டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் பாறை எரிவாயு எடுக்கும் திட்டம் கொண்டு வருவதை மக்கள் விரும்பவில்லை, அதனால், அதை ஏற்க முடியாது. இந்த நாட்டிற்கே, உணவு வழங்கும் நெற்களஞ்சியத்தை அடுத்த  தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டியது நமது கடமை ஆகும். எனவே, டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்