போயஸ் கார்டன் செல்ல இருக்கும் ஜெ.தீபா: தொண்டர்கள் உற்சாகம்!

திங்கள், 30 ஜனவரி 2017 (10:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தொண்டர்கள் மத்தியில் கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.


 
 
ஜெயலலிதா அவரது தாய் சந்தியாவுடன் சேர்ந்து போயஸ் கார்டன் வேதா இல்லத்தை வாங்கினார். பின்னர் அவர் தனது தோழி சசிகலாவுடன் அந்த வீட்டில் பல ஆண்டு காலம் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பின்னரும் அவரது தோழி சசிகலா போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தின் உண்மையான வாரிசு தான் தான் என கூறிவந்தார். அது எனது பாட்டி சந்தியா வாங்கிய சொத்து. அதன் வாரிசு நான் தான். அதில் இருக்க சசிகலாவுக்கு உரிமை இல்லை என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தீபாவின் வீட்டின் முன்னர் ஏராளமான அதிமுகவினர் தினமும் கூடி வருகின்றனர். அவர்கள் மத்தியில் அடிக்கடி தீபாவும் பேசி வருகிறார். நேற்று முன்தினம் தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபாவிடம் கூட்டத்தில் இருந்த ஒரு தொடர் உரத்த குரலில் எப்போது போயஸ் கார்டன் செல்வீர்கள் என கேட்டார்.
 
அதற்கு பதில் அளித்த ஜெ.தீபா, நான் போயஸ் கார்டனுக்கு செல்வது தொண்டர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என கூறினார். இதனையடுத்து தீபா ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்ல தயாராக இருப்பதால் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவின் ஒரு பிரிவினரும் உற்சாகமடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்