விபத்தில் தம்பதி பலி: கொளத்தூர் மணி கார் மோதியதா?

வியாழன், 27 அக்டோபர் 2016 (15:58 IST)
சேலம் அருகே நடந்த கார் விபத்தில் தம்பதியினர் பலியாகியுள்ளனர். கொளத்தூர் மணி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 

 
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவரது மனைவி விஜயா (38). இவர்கள் இருவரும் ஓமலூரிலிருந்து மேச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
 
மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடி என்ற இடத்தில் சென்றபோது வாலிபர் ஒருவர் திடீரென குறுக்கே புகுந்துள்ளார். இதனால் நிலைதடுமாறி ராஜேந்திரன் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
 
பின்னர், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி வந்த கார் மீது கண் இமைக்கும் நேரத்திற்குள் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பலியாகினர்.
 
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேச்சேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 பேருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
ஆனால், இந்த சம்பவத்தை கொளத்தூர் மணி மறுத்துள்ளார். அவர்கள் மீது இன்னொரு வண்டி மோதி, இருவரும் தூக்கிவீசப்பட்டு தங்களது கார் மீது விழுந்து உயிரிழந்தனர் என கொளத்தூர் மணி விளக்கம் அளித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்