அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூ 4,000 உதவித்தொகை - அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

திங்கள், 21 ஜூன் 2021 (12:32 IST)
கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 439 பேருக்கு 4000 உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளையும், 206 ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவியையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். 

 
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் சம்பளமின்றி வேலை செய்யும் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு ரூ 4 ஆயிரம் உதவித்தொகையும் 10 கிலோ அரிசி உள்பட 15 பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சம்பளமின்றி பணியாற்றும் 439 அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு 4 ஆயிரம் உதவித்தொகையும் 10 கிலோ அரிசி உட்பட 15 வகையான மளிகைப் பொருட்களும் அதேபோல் சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ 25 ஆயிரம் பணம் ஆகியவை மொத்தம் 206 பேருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு கோவில் அரசர்களுக்கும் பூசாரிகளுக்கு 4 ஆயிரம் உதவித்தொகை உட்பட 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து சமூக நலத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி படித்த ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை 25 ஆயிரமும் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கினார். 
 
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் அவர்கள் முதல் தவணையாக மே 10 ந்தேதியும், கலைஞர் பிறந்தநாள் அன்று 2 ம் தவணையாக நிவாரணங்களை வழங்குவது  துவக்கி வைத்தார். அதிலிருந்து பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில்  நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. கோவையில், 353 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது, இதில், 439 பேர் பணியாற்றி வருகின்றனர். 
 
கொரோனா காலத்தில் யாரும் பாதிக்ககூடாது எனவும், அதேசமயத்தில், இலங்கை அகதிகளுக்கும் நிவாரணங்களை முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளார். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர் அனைவரையும் முன்கள பணியாளர்களாக அறிவித்து நிவாரணங்களை முதல்வர் வழங்கி வருகின்றார். கோவைக்கு இரு முறை வந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அவர்கள், பிபி கிட் அணிந்து, கொரோனா நோயாளிகளையும் சந்தித்து பேசினார். 
 
பெரும் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் என கூறியவர், பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அசாதாரணமாக இருக்க கூடாது, முக கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்