பல கோடி ரூபாய் மோசடி செய்த தீபா?: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (11:49 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராம் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது தீவிர தொண்டர்கள் அவரது அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர அழைத்து தினமும் அவரது வீட்டின் முன்னர் குவிந்து வந்தனர். இதனையடுத்து நீண்ட நாட்கள் கழித்து ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என தனது பெயரையும் சேர்த்து புதிய பேரவை ஒன்றை ஆரம்பித்தார்.
 
பேரவை ஆரம்பிக்கப்பட்டு 3 லட்சம் விண்ணப்ப படிவத்துக்கு தலா 10 ரூபாய், ஒரு விண்ணப்பத்திற்கு 25 உறுப்பினர்கள் வீதம் 250 ரூபாய் என கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேல் வசூலானதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒன்றிய செயலாளர் பதவிக்கு 5 லட்சம், மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 லட்சம் என வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அங்கீகாரமே ரத்தாகிவிட்டதை மறைத்து பணம் வசூலிப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராம் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், தீபா தனது பேரவையின் அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்