தனியாக இருக்கும் பெண்கள் டார்கெட்; வன்கொடுமை, கொள்ளை! – சென்னையை நடுங்க வைத்த கொள்ளையன்!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
சென்னையில் ஆளில்லா வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி மற்றும் பக்தவத்சலம் பகுதியை சேர்ந்த இரு வெவ்வேறு வீடுகளில் உள்ளோர் வெளியூர் சென்றிருந்தபோது அவர்கள் வீட்டில் பணம், நகை கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரு பகுதியிலும் ஒரே ஆசாமி கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார் கொள்ளையடித்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரபல கொள்ளையன் அறிவழகன் என தெரிய வந்துள்ளது, அதையடுத்து ஓசூரில் பதுங்கியிருந்த அறிவழகனை போலீஸார் கைது செய்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.

இவர்மீது சென்னையில் பல பகுதிகளிலும், கிருஷ்ணகிரியிலும் பல கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக பெண்கள் தனியாக உள்ள வீடுகளை டார்கெட் செய்து கொள்ளையடித்த அறிவழகன் அந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் முன்னதாக கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளிவந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது அதுபோன்ற செயல்களை விடுத்து ஆளில்லா வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளையடித்த நிலையில் அறிவழகன் போலீஸாரிடம் சிக்கியுள்ளான். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை சிறையில் அடைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்