3 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேல் வழக்கு: ஊரடங்கை மதிக்காத மக்கள்!

திங்கள், 22 ஜூன் 2020 (12:27 IST)
தமிழகத்தின் தலைநகரான சென்னை முதற்கொண்டு 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் பலர் ஊரடங்கு விதிகளை மீறுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தலைநகரான சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் மக்கள் பலர் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகின்றனர். முழுமுடக்க விதிமுறைகளை மீறியதாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறியதாக 10,036 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி பின்பற்றாதது போன்ற மீறல்களுக்காக 3,517 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்று சராசரியாக ஆயிரம் பேர் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கடைப்பிடிப்பதில்லை என தெரிகிறது.

கடந்த 3 நாட்களாக சென்னை முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதால் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்