சென்னை கார் விபத்தில் மனைவியோடு உடல் கருகி மரணமடைந்த கார் ரேஸர் அஷ்வின்!!

சனி, 18 மார்ச் 2017 (12:08 IST)
பிரபல கார் ரேஸர் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகிய இருவரும் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 
 
அஷ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் அதிகாலை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தனர். 
 
அப்போது பிஎம்டபிள்யூ கார் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதி உடைத்து மரத்தின் மீது மோதி சிக்கியது. இதில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
 
காரை விட்டு வெளியே வர முடியாததால் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
 
அந்த வழியாக சென்றவர்கள் கார் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
முதலில் காரில் உள்ளவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் கார் நம்பரை கொண்டு அடையாளம் காணப்பட்டனர். 
 
2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றவர் அஷ்வின். அஷ்வினின் மனைவி நிவேதிதா மருத்துவராவார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்