தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் தகவல்..!!

Senthil Velan

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (16:05 IST)
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 28 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய தமிழகப்பகுதிகள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
24 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
25 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வருகிற 26 முதல் 28 வரை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் 29ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: அதிமுக பாமக கூட்டணி முடிவுக்கு வருமா...? இபிஎஸ் உடன் பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு.!!
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்