மத்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெறுகிற வாகனப் பேரணியில் பங்கேற்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்நிலையில், பேரணி குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், "கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி, 'ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்' சார்பில், வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னைக் கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப் பின்னரும், அதை பொருட்படுத்தாமல், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு நடந்து வருகிறது.
ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்த பிறகும், அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது அநீதியாகும். மத்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெறுகிற வாகனப் பேரணியில் பங்கேற்போம்" என்று கூறியுள்ளார்.