ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரக் கோரிய வழக்கு.? மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு.!!

Senthil Velan

புதன், 11 செப்டம்பர் 2024 (13:07 IST)
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய  கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து, மக்கள் பயனடைவர் எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மனுதாரரும், வழக்கறிஞருமான கனகராஜ், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்குவதாகவும், அதனால் ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
 
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலை, 60 முதல் 70 ரூபாயாக குறையும் என குறிப்பிட்டார். இதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் ரேஷன், வீட்டுவசதி, எரிவாயு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், டாஸ்மாக் மட்டும் இலவசமாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். மேலும், அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2020ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்கக் கோரினார். 


ALSO READ: கைதிகள் விடுதலை விவகாரம்.! எப்படி நிராகரிக்க முடியும்.! ஆளுநருக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்.!!
 
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  நான்கு வாரங்களில் மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்