’கொடூரம்’ - பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (08:10 IST)
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அமிர்த மங்களம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான தாமோதரனுக்கு, அம்பிகா என்ற மனைவியும் அனுப்பிரியா (11), இந்துமதி (8) என்ற 2 மகள்களும் உள்ளனர்.


 


இந்நிலையில் அம்பிகாவுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் போது மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அம்பிகாவிடம், தாமோதரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை ஆசிரமத்தில் விட்டு விடலாம் என்று தாமோதரன் கூறியதை, அம்பிகா ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு, திடீரென மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை தாமோதரன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை பார்த்து அம்பிகா கூச்சலிட்டு கதறி துடித்தார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த காவல்துறையினர்,  குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரனை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்