கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும்; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதன், 8 ஆகஸ்ட் 2018 (12:08 IST)
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும் திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அரசு சார்பாக சட்டமன்ற வளாகத்தில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதன்பின் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படம் வைத்து மலர் மாலை அணிவித்தனர்.
 
அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 7ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு புதுச்சேரி அரசு துக்கம் அனுசரிக்கும் என முதல்வர் கூறினார். செய்தியாளர் சந்திப்பில், மெரினாவில் திமுக தலைவருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் புதுச்சேரியில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்