தமிழக வெற்றி கழகத்தின் பூத் ஏஜென்ட் மாநாடு கோவையில் நடைபெற இருப்பதாகவும், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், பிரம்மாண்டமாக முதல் மாநாட்டை நடத்தி காட்டினார். அதன் பிறகு, சென்னை அருகே முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, பூத் ஏஜென்ட்கள் மாநாட்டை கோவையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார் என்பதற்கான செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் பூத்துக்களில் ஏஜென்ட்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டை மண்டல வாரியாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
பூத் ஏஜென்ட் மாநாடு நடைபெறும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், இந்த மாநாட்டில் ஒவ்வொரு பூத்து ஏஜெண்டும் செயல்பட வேண்டியது எப்படி என்பது குறித்து விஜய் அறிவுரை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக, திமுக போன்ற அனுபவம் உள்ள கட்சிகளைப் போலவே, மிகவும் திட்டமிட்டு பூத் ஏஜென்டுகள் வரை கவனம் செலுத்தி வரும் விஜய், தமிழக அரசியலில் வித்தியாசமான அரசியல் தலைவராக பார்க்கப்படுகிறார்.