இந்த மிரட்டலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சப்போவதில்லை- வானதி சீனிவாசன்

புதன், 1 நவம்பர் 2023 (13:03 IST)
சமீபத்தில் சென்னை, பனையூரில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் பாஜகவின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியக் கொடிக்கம்பம் நிறுவப்படுவதற்கு அங்குள்ள  இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கண்டித்து பாஜகவினர்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இக்கொடிக் கம்பத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கோவை மாநகர் மாவட்ட தலைவர்  பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் மாநில துணை தலைவர் கனகசபாபதி இருவரும் மசக்காளி பாளையத்தில் பாஜக கொடியை ஏற்றச் சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில்,

‘’தமிழக பாஜகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு கோவை மாவட்டம் மசக்காளி பாளையத்தில் பாஜக கொடியை ஏற்ற சென்ற கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள் மற்றும் மாநில துணை தலைவர் திரு  கனகசபாபதி அவர்களையும் கட்சி தொண்டர்களையும் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த மிரட்டலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சப்போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்