பேனர் வைத்த தகராறில் பாஜகவைச் சேர்ந்தவருக்கு கத்திக் குத்து! சென்னையில் பரபரப்பு!

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:34 IST)
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்தவரை முன் விரோதம் கத்தியால் குத்தியுள்ளார் சசிக்குமார் என்பவர்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அப்பகுதியில் பால்கடை நடத்தி வந்துள்ளார். பாஜகவில் ஆர்வம் கொண்ட அவர் வில்லிவாக்கம் தெற்கு பகுதி பாஜக பொருளாளராகவும் உள்ளார். இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி ஜெயக்குமார் பேனர் வைக்க அதைக் கிழித்துள்ளார் சசிக்குமார் என்பவர்.

இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாக காவல் நிலையத்தில் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பியுள்ளனர். ஆனாலும் இருவருக்கும் இடையே பகை தீரவில்லை.  இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ஜெயக்குமார், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்லும் போது சசிக்குமார் அங்கு வர இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயக்குமாரை 3 முறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் சசிக்குமார். படுகாயமடைந்த ஜெயக்குமாரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அக்கம்பக்கத்தினர். இது சம்மந்தமாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்