உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் ஒருவருக்கு ஜாமின் - விசாரணை ஒத்திவைப்பு
செவ்வாய், 28 ஜூன் 2016 (11:36 IST)
உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கில் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. மேலும், விசாரணை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை சிறப்பு நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
கைது செய்யப்பட்ட கௌசல்யாவின் பெற்றோர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.
அரசுத்தரப்பு சாட்சி விசாரணைக்காக சங்கரின் மனைவி கௌசல்யா மற்றும் கொலையை நேரில் பார்த்த சாட்சியுமான வேணுகோபால் ஆகியோர் நீதிமன்றத்துக்கு அரசு தரப்பில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ஆனால் வழக்குரைஞர்களின் போராட்டம் மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக அப்போது வெளியான விடியோ பதிவுகள் சென்னையில் ஆய்வகத்தில் இருப்பதால், இதுவரை விடியோ பதிவு தொகுப்புகளை அரசு தரப்பு சார்பில் எதிர்த்தரப்புக்கு வழங்கப்படவில்லை.
இதனால் சாட்சி விசாரணை திங்கள்கிழமை தொடங்கவில்லை. மாறாக எதிர்த்தரப்புக்கு விடியோ பதிவுத் தொகுப்புகளை வழங்கியவுடன் சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிப்பது தொடர்பாக, அரசுத் தரப்பில் தனி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசு தரப்பு சிறப்பு அரசு வழக்குரைஞர்கள் குழுவை சேர்ந்த சங்கரநாராயணன், எஸ்.ரூபன், ஆர்.செந்தில்குமார், ஜி.ராஜசேகரன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட எம்.மணிகண்டன் சார்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.