ஜிஎஸ்டியால் தமிழகம் வருவாயை இழந்துள்ளது! – பட்ஜெட் தாக்கலில் பழனிவேல் தியாகராஜன்!

வெள்ளி, 18 மார்ச் 2022 (10:32 IST)
தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் ஜிஎஸ்டியால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர் “இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வருவாயில் ஏறத்தாழ 10 சதவீதம் தமிழ்நாட்டின் மூலமாக கிடைக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை. கடந்த 2014 ஆண்டு முதலாக தொடர்ந்து அதிகரித்து வரும் அரசின் வருவாய் பற்றாக்குறை முதல் முறையாக வரும் ஆண்டில் சுமார் 7 ஆயிரம் கோடி குறைய உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வரும்போது தமிழ்நாடு அரசு 20 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என்றும், அதனால் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகாலம் நீட்டிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்