3 நிலக்கரி சுரங்கத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

சனி, 8 ஏப்ரல் 2023 (16:26 IST)
தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விட மத்திய அரசு முடிவு எடுத்தது. இதற்கு பலத்த எதிப்பு கிளம்பிய நிலையில், இதுகுறித்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த  நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டர் ரத்து செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்ட சுரங்கங்களைப் போல கடலூர் மாவட்டத்தின் 3 நிலக்கரி சுரங்கத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்  என்று பாமக தலைவர் அன்ம்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகில நிலக்கரித் திட்டங்களை ஏலப்பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தியிருப்பதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார். அவ்வாறு அவை நீக்கப்பட்டால் மகிழ்ச்சி!

என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். கடந்த ஓராண்டில் மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம், என்.எல்.சிக்கு பூட்டுப் போடும் போராட்டம், கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம், கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள்,  பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் உள்பட 20க்கும் மேற்பட்ட போராட்டங்களை  நடத்தி விழிப்பை ஏற்படுத்தியது பா.ம.க தான்.  இத்திட்டங்கள் கைவிடப்பட்டால் அது பா.ம.கவின் வெற்றியே!

கைவிடப்படும் 3 திட்டங்களை விட  என்.எல்.சி மூன்றாம் சுரங்கம், வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான இத்திட்டங்களின் பெரும் பகுதி காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தான் வருகிறது!

மூன்று நிலக்கரித் திட்டங்கள் எதற்காக கைவிடப்பட்டனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் இந்தத் திட்டங்களுக்கும் பொருந்தும்.  தமிழ்நாட்டு மக்கள் நலனை மதிக்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அதே உணர்வுடன் என்.எல்.சி மூன்றாம் சுரங்கம், வீராணம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டத்தையும் கைவிட வேண்டும்!

தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 3 திட்டங்களையும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். என்.எல்.சி மூன்றாம் சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்!’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்