தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

Siva

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (07:46 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நானே தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் பாமக கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
“பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.
 
ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காகவே 1989 ஜூலை 16-ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது நிறுவனர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார்.
 
அப்போது உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி, பாக்க தலைவர் பொறுப்பை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில், 2022 மே 28 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் வாழ்த்துகளுடன் உங்கள் ஆதரவுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
 
கட்சியின் தலைவராக நான் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன்.
 
எந்த நோக்கத்திற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாக்கவை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்கள் ஆதரவுடன் மேலும் தீவிரமாக பயணிக்க உறுதி செய்கிறேன்.
 
என் பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று நம்புகிறேன்.
 
நம்முன் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய இரண்டு இலக்குகள் உள்ளன.
முதலாவது, வரும் மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது.
இரண்டாவது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலைநிறுத்துவது.
 
மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநாடு பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கி, ராமதாஸ் என்னை மாநாட்டுக்குழு தலைவராக நியமித்துள்ளார்.
 
இந்தப் பணியை வெற்றிகரமாக முடிப்பது நம் அனைவருக்கும் கடமை. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன்.
 
அதேபோல், பாட்டாளி சொந்தங்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
 
2026 சட்டப்பேரவை தேர்தலைக் குறித்த வரை, பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமை. அந்தக் கடமையை மகிழ்ச்சியுடன், சரியான நேரத்தில் செய்து முடிப்போம்.
 
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் இது தான் என் தலையாய பணியாகும். மாநாட்டு பணிகளையும், சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.
 
மீண்டும் சொல்கிறேன்... அரசியல் களத்தில் ராமதாஸின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக விரைவில் உங்களை சந்திக்க வருவேன்” என அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்