பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் ஜெயலலிதா: அஜீத் புகழாரம்

செவ்வாய், 6 டிசம்பர் 2016 (08:41 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.


இந்நிலையில் முதல்வர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்