வெளிய உதார் விட்டுட்டு, உள்ளுக்குள்ள பங்காளிகள்... திராவிட கட்சிகளை வாரிவிட்ட கஸ்தூரி!

புதன், 26 ஜூன் 2019 (12:11 IST)
நடிகை கஸ்தூரி குடித்துவிட்டு வண்டி ஓட்டிய இருவர் ஏற்படுத்திய விபத்தால் தன் மனைவியை இழந்துள்ள மருத்துவர் ரமேஷ் குறித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 
 
இந்த பதிவில் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார் கஸ்தூரி. அந்த பதிவு பின்வருமாறு... கோவை மருத்துவர் டாக்டர் ரமேஷ் வாழ்க்கையில் சரக்கு விளையாடிவிட்டது. என்ன செய்தார் அவர்? குடித்து தன்னை தானே அழித்துக்கொண்டாரா? டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு இரு பொறம்போக்குகள் மோட்டார் பைக்கை அந்த நல்லவரின் மனைவி மகள் மீது ஏற்றிவிட்டனர். மனைவி அங்கேயே உயிரிழந்தார். 
மகள் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்க, தகப்பனோ அந்த இடத்திலேயே மதுவுக்கு எதிராக போராட செய்தியை படித்த நமக்கு பதறுகிறது. தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் டாக்டர் ரமேஷின் நிலை அவர் தலையெழுத்து என்றோ ஒரு தற்குறியின் தவறு என்றோ கடந்து போய் விட முடியாது. இது தமிழகத்தின் தலைகுனிவு. திராவிட அரசுக்களின் தனிப்பெருமை.
 
குடிப்பது தனிமனித உரிமை, தனிப்பட்ட விருப்பம், நீ யார் தலையிட?... என்னது, உரிமையா? தனிமனித சுதந்திரமா? ஒரு தனிமனிதன் குடித்தால் அவனுக்கு மட்டுமா தீங்கு? நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வளவு கேடு! 
தமிழக கஜானா மதுவை நம்பித்தானே இருக்கிறது.... ஓஹோ! 'குடி'மகன்களால் அரசுக்கு வருமானமா? கணக்கு போட்டு பார்த்தால்... மதுவால் அரசுக்கு வருமானமா, அவமானமா? ஆனாலும் திராவிட அரசுக்கள் மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை கெட்டியாக பிடித்துக்கொள்வது ஏன்? ஏனென்றால்... மதுவால் அரசுக்கு வருமானம் என்பதை விட, அரசியல்வாதிகளுக்கு அளவிலாத லாபம் என்பதே உண்மை. 
 
தமிழ்நாட்டின் போதை சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல்புள்ளிகள், அதிகாரிகள, குறிப்பாக திராவிட இயக்கத்தினர், நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம். 
அரசியலில் எதிரும் புதிருமாக உதார் காட்டுபவர்கள் இங்கு வியாபாரத்திலும் கையூட்டிலும் பங்காளிகள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதைவிட முக்கியம், திராவிட அரசியலின் மிக பெரிய ராஜதந்திரம் மதுதான். அதைவைத்துதான் மக்களை வறுமையில் அறியாமையில் உழலும் சிந்திக்கவே இயலாத ஆட்டுமந்தை கூட்டமாக அடிமைப்படுத்தி வைத்து உள்ளார்கள். 
 
குவார்ட்டர் குடுத்தால் போதும், ஓட்டையும் வீட்டையும் நாட்டையும் விற்றுவிடுவான் தமிழன் என்ற நிலையில் வைத்துள்ளார்கள். அதனால்தான் நம் திராவிட தலைவர்கள் மத்திய அரசை எதிர்ப்பார்கள். நம் மத்தியில் உள்ள மது அரக்கனை எதிர்க்கவேமாட்டார்கள். பலகை மொழியை அழிப்பார்கள், படுகுழியை ஒழிக்கமாட்டார்கள். 
குடிச்சு குடிச்சு குடல் வெந்து சாகட்டும்... பெற்ற குழந்தைகளை பட்டினி போடட்டும், குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கட்டும்,கட்டின பொண்டாட்டியை அடிக்கட்டும் கொல்லட்டும், இப்பொழுது அடுத்தவன் குடும்பத்தையும் இடிக்கட்டும் கொல்லட்டும்...
 
இந்த நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்.... அவங்க பாக்கெட்டு நிறைஞ்சால் சரி என்றே நமது அழிவை ரசிப்பார்கள். தலைமையை நம்பி தமிழன் தடுமாறியது போதும். தெளிந்திடு தமிழா தெளிந்திடு! 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்