சசிகலாவை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தால் நடவடிக்கை!

புதன், 14 டிசம்பர் 2016 (14:43 IST)
தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியினர் கூறுகின்றனர்.


 
 
இதனை வைத்து சமூக வலைதளங்களில் சசிகலா விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பட்டையை கிளப்புகிறது. சின்னம்மா தான் அடுத்த அம்மா எனவும், அவர் கழகத்தின் பொது செயலாளர் பதவியை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என மூத்த நிர்வாகிகள் சசிகலாவை வற்புறுத்துவதாகவும் செய்திகள் வருகிறது.
 
இவைகள் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுவதால் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய அதிமுக தொழில்நுட்ப பிரிவினர் அதிமுக பற்றியோ சசிகலா பற்றியோ சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினாலோ கொண்டலாக மீம்ஸ் பரப்பினாலோ அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
 
சசிகலா பற்றி எதிர்கட்சிகள் தான் பெரும்பாலான எதிர்மறை கருத்துக்களை திட்டமிட்டு வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். அவர்கள் இதை நிறுத்த வேண்டும் என அதிமுக தொழில்நுட்ப பிரிவினர் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்