காதலனை நம்பி போன 10ம் வகுப்பு மாணவி! – அடுத்து நடந்த கொடூரம்!

புதன், 26 அக்டோபர் 2022 (12:02 IST)
திருவள்ளூரில் 10ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி வன்கொடுமை செய்து கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான திலகா. இவருக்கு 15 வயதில் உஷா என்ற மகள் உள்ளார். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்து தனது மகளுடன் தனியே வாழ்ந்து வந்துள்ளார் திலகா.

சிறுமி உஷா பெரிய பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் மூக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 19 வயது இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை சொல்லி மயக்கிய பிரவீன் அடிக்கடி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

சில சமயங்களில் சிறுமியை அழைத்து சென்று மது ஊற்றிக் கொடுத்து தனது சக நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி உஷா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ப்ரவீனை வற்புறுத்தியுள்ளார்.

ALSO READ: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை: வானிலை ஆய்வு மையம்!

இதனால் நைஸாக உஷாவிடம் பேச்சுக் கொடுத்து தனியே அழைத்து சென்ற ப்ரவீன், அங்கு தன் நண்பன் ரஞ்சித் என்பவனுடன் சேர்ந்து மாணவிக்கு மது ஊற்றிக் கொடுத்து தலையில் கல்லால் தாக்கியும், கழுத்தை நெறித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை கொள்ளனூர் ஏரியில் வீசியுள்ளனர்.

ஏரியில் சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் சிறுமிக்கும், ப்ரவீனுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர். அப்போது ப்ரவீன் மேற்கண்ட சம்பவங்களை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்