கண்ணீர் கடலில் மிதக்கும் அரியலூர்!!! ராணுவ வீரரின் வீர மரணத்தால் மீளா துயரத்தில் கிராம மக்கள்

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (15:45 IST)
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில்  44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் வீர மரணமடைந்துள்ளார்.
 
காஷ்மீர் புல்வாமாவில் நேற்று திடீரென்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
 
இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயதான சுப்ரமணி என்ற வீரரும் ஒருவராவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் கடந்த 10 ஆம் தேதிதான் பணிக்குத் திரும்பியுள்ளார். சுப்ரமணியின் இறப்பால் தூத்துக்குடி மாவட்டம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
 
இந்நிலையில் அடுத்தபடியாக அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற ராணுவ வீரர் இத்தாக்குதலில் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது. இறந்த சிவச்சந்திரனுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. அவருக்கு 1 வயதில் மகன் இருக்கிறான். அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சிவச்சந்திரனுக்கு திருமணமாகாத வாய்பேச முடியாத தங்கை இருக்கிறார். மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் அவரது குடும்பத்தாரும் கிராம மக்களும் மீளா சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்